திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்


திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2019 9:30 PM GMT (Updated: 29 Aug 2019 8:37 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருச்செந்தூர், 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். கோவிலில் இந்த ஆண்டு ஆவணித் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந் தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்கள், வள்ளி அம்பாள் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அதிகாலை 5.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 6.10 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் காலை 6.15 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது திரளான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.

தேரின் முன்பாக கோவில் தெய்வானை யானை சென்றது. தேர் இழுக்கும் பக்தர்களுக்கு மயில் இறகினாலான பெரிய விசிறியால் பக்தர் ஒருவர் வீசியவாறு சென் றார். நான்கு ரத வீதிகளிலும் திரண்டு இருந்த பக்தர்களின் நடுவில் அசைந்தாடிச் சென்ற தேர் காலை 7.15 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து காலை 7.20 மணிக்கு வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 8 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தேரோட்ட விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் சுவாமிநாத தம்பிரான், கோவில் இணை ஆணையர் குமரதுரை, தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர்கள் முருகன், ஆனந்த், சுப்பிரமணியன், ராமசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன், காயாமொழி பெரிய கல்வீடு முருகன் ஆதித்தன், முப்புராதி அம்மன் கோவில் அக்தார் வரதராஜ ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஆங்காங்கே குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரதாபன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் புறப்பட்டு, சன்னதி தெருவில் உள்ள யாதவ மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள்.

12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story