தனியாக இருந்த மூதாட்டியிடம் தந்திரமாக பேசி தபால் ஊழியர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டு - மர்ம ஆசாமியின் தொடர் கைவரிசையால் பொதுமக்கள் அச்சம்


தனியாக இருந்த மூதாட்டியிடம் தந்திரமாக பேசி தபால் ஊழியர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டு - மர்ம ஆசாமியின் தொடர் கைவரிசையால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 30 Aug 2019 11:18 PM GMT (Updated: 30 Aug 2019 11:18 PM GMT)

அவினாசியில் தபால் ஊழியர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தந்திரமாக பேசி, ரூ.1½ லட்சத்தை மர்ம ஆசாமி ஒருவர் திருடி சென்று விட்டார். மர்ம ஆசாமியின் தொடர் கைவரிசையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அவினாசி,

அவினாசி அருகே உள்ள பழங்கரை ஊராட்சி ரங்கா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 50). இவர் திருப்பூரில் தபால் ஊழியராக வேலை பார்த்து வரு கிறார். இவரது மனைவி கல்பனா. இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடன் கல்பனாவின் தாயார் சரஸ்வதி (80) இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் கணவனும், மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர்.

இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு மர்ம ஆசாமி ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சரஸ்வதியிடம் “ உங்கள் வீட்டில் மின் பராமரிப்பு பணிகள் செய்யச் சொல்லி உங்களது மருமகன் என்னை அனுப்பி வைத்துள்ளார். பீரோவில் வயர் மற்றும் மின் சாதன பொருட்கள் வைத்திருப்பதாகவும் சொல்லி அனுப்பி உள்ளார். எனவே அவைகளை எடுக்க வேண்டும் பீரோ சாவியை தாருங்கள்” என்று சாவியை வாங்கி கொண்டு செல்போனை தனது காதில் வைத்துக்கொண்டு, இதோ பாட்டியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், வயர் இருக்கிறதா என பார்க்கிறேன்? என்று சொல்லிக்கொண்டே வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மற்றும் ½ பவுன் தங்க காசு, ½ பவுன் கம்மல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பாட்டி வயர் இல்லை, இதை நான் உங்கள் மருமகனிடம் சென்று கூறி விடுகிறேன், நீங்கள்பத்திரமாக இருங்கள் என்று கூறிவிட்டு நைசாக நழுவி சென்று விட்டார்.

அதன் பிறகு சந்தேகமடைந்த சரஸ்வதி தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார் அப்போது அவரது மகள் இதுகுறித்துதனது கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது கணவர் நான்அப்படி யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்து விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகிறார்கள். மர்ம ஆசாமிகளின் தொடர் கைவரிசையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதேபோல் கடந்த 28 -ந் தேதி அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம் பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் தந்திரமாகப் பேசி பீரோ சாவி வாங்கி பட்டப்பகலில் நகைகளை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஒரே ஊராட்சி பகுதியில் திருட்டு சம்பவங்கள் ஒரே மாதிரி நடந்தது அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story