நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு


நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 7:34 PM GMT)

நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு.

பெரம்பலூர்,

தேசிய, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிக்காட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவில், கிரிமினல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனித உரிமை, அமில வீச்சு, போக்சோ சட்டம், மூத்தோர் குடிமக்கள் சட்டம் மற்றும் அனைத்து வகை சட்டங்கள் உள்ளடக்கிய புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.

இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் ஆவார்கள். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் நிலைமையை அறிந்து நீதிபதிகள் மருத்துவமனை, சிறைச்சாலை ஆகியவற்றிற்கு நேரில் சென்று உத்தரவிட சட்டத்தில் வழி உள்ளது. நீதிபதிகள் அனைத்து கிராமங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளை வக்கீல்கள் மற்றும் சமூக சட்ட ஆர்வலர்கள் ஆகியோர் உதவியுடன் எடுத்துரைக்க வேண்டும்.

அப்போது தான் அடித்தட்டில் உள்ள மக்களுக்கும் நீதி கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றார். மேலும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி லிங்கேஸ்வரன், மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி மலர்விழி, பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிரி மற்றும் சார்பு நீதிபதி வினோதா ஆகியோர் நீதிபதிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தனர். பயிற்சியில் நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், கருப்புசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், பயிற்சி நீதித்துறை நடுவர் செந்தில்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story