அரவக்குறிச்சி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி ஆடிட்டர் பலி போலீசார் விசாரணை


அரவக்குறிச்சி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி ஆடிட்டர் பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 8:18 PM GMT)

அரவக்குறிச்சி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஆடிட்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரவக்குறிச்சி,

மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). இவர் விருதுநகரில் இந்து சமய அறநிலையத்துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை மதுரையில் இருந்து கரூருக்கு காரில் புறப்பட்டார். அந்த கார் கரூர் அரவக்குறிச்சி ஜவுளி பூங்கா அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி, சாலையோரம் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பிரகாஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story