திருச்சி மாநகரில் வீட்டு வரி உயர்வு நிறுத்திவைப்பு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்


திருச்சி மாநகரில் வீட்டு வரி உயர்வு நிறுத்திவைப்பு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2019 11:15 PM GMT (Updated: 31 Aug 2019 8:31 PM GMT)

திருச்சி மாநகரில் வீட்டு வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பின்னர் விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என 13 பேருக்கு மாத உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும், சொத்துவரி பெயர் மாற்றம் செய்து ஒருவருக்கும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சக்கர நாற்காலியும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முகாமில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

வீட்டு வரி உயர்வு நிறுத்தம்

அனைத்துத்துறை அலுவலர் களும் கிராமம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சி பகுதியில் வீட்டு வரி அதிகமாக இருப்பதால், தற்போது நிறுத்தி வைக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால், பாதாள சாக்கடை, வீட்டுவரி, முதியோர் உதவித்தொகை போன்றவை தொடர்பான மனுக்கள் தான் வரப்பெற்றுள்ளது. இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசின் விதிமுறைக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறைவேற்றி தரப்படும். சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் இதுவரை 15,182 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் 2,985 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 11,636 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சியில் திருச்சி உதவி கலெக்டர் அன்பழகன், திருச்சி மேற்கு தாசில்தார் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் 34, 35, 37 ஆகிய வார்டு பகுதிகளுக்கும், செங்குளம் காலனியில் 43-வது வார்டு பகுதிக்கும், திருச்சி மேற்கு தாலுகா உறையூரில் உள்ள ஒரு மண்டபத்தில் 57, 58-வது வார்டுகளுக்கும் முகாம் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களிடம் இருந்து 900 மனுக்களை பெற்றார். மேலும் விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை பெற 25 பேருக்கு ஆணை, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.


Next Story