கஞ்சா விற்ற 3 பேர் கைது - 25 கிலோ பறிமுதல்


கஞ்சா விற்ற 3 பேர் கைது - 25 கிலோ பறிமுதல்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:00 PM GMT (Updated: 1 Sep 2019 7:02 PM GMT)

கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கம்பம், 

கம்பம் காட்டுபள்ளி வாசல் சாலை 18-ம் கால்வாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சாக்குமூட்டையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்குமூட்டையை போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் 25 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அவர்கள் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த பாண்டி (வயது 30), குரங்குமாயன் தெருவை சேர்ந்த தமிழரசன் (30) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 25 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டியில் ராஜதானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த அபிஜார்ஜ் (37) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story