மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்


மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:30 PM GMT (Updated: 1 Sep 2019 7:29 PM GMT)

மெலட்டூரில் உள்ள தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது மெலட்டூர் கிராமம். பாகவத மேளாக்களுக்கு பெயர் பெற்ற ஊர் என்பதால் மேளத்தூர் என்ற பெயரும் இந்த கிராமத்துக்கு உண்டு. அதுவே நாளடைவில் மெலட்டூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் விநாயகர் சித்தி, புத்தியுடன் அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். ஸ்ரீகர்க மகரி‌ஷியின் ஞான புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் 81-வது தலமாகும்.

சுயும்புவாக...

இக்கோவிலில் அருள்பாலித்து வரும் விநாயகரின் திருமேனி உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. விநாயகர் கோவிலாக இருந்தாலும் இக்கோவில் சிவன் கோவில் போலவே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் ஆகும். சிவன் கோவிலில் நடராஜர் அருள்பாலிப்பது போல இக்கோவிலில் நர்த்தன விநாயகர் அருள்பாலிக்கிறார். அதேபோல் அஸ்திர தேவரை போல சூலாயுதம் தாங்கி சூலத்துறை கணபதியும் காட்சி அளிக்கிறார்.

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தேரோட்டம்

திருவிழாவில் 7-ம் நாளில் விநாயகருக்கு சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது.

இதில் தட்சிணாமூர்த்தி விநாயகர் சித்தி, புத்தியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து கோவில் அருகே உள்ள நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Next Story