விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் 156 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு


விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் 156 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Sep 2019 10:15 PM GMT (Updated: 2 Sep 2019 8:29 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் 156 இடங்களில் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூர், 

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு, பின்னர் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்தி சிலை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்புரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திரா நகர், பெரியார் நகர், வடக்கு மாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, பெரிய தெற்கு தெரு, வெங்கடேசபுரம், துறைமங்கலம் மற்றும் எளம்பலூர் சாலையில் ஆர்.எம்.கே.நகரில் 12 அடி உயர வீர விநாயகர் சிலை உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் ஆகிய தாலுகாக்களில் போலீசார் அனுமதியுடன் 156 இடங்களில் மயில், அன்னம், சிங்கம், மாடு, மான், தாமரை போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது, ஐந்துமுக சிங்க விநாயகர், சிவலிங்கத்தில் விநாயகர், கருட வாகனத்தில் விநாயகர், கிருஷ்ணருடன் விநாயகர், சிவன், பார்வதி, முருகன் குடும்பத்துடன் இருப்பது போன்ற விநாயகர், நந்தி விநாயகர், ரெங்கநாதர் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பக்தர்கள் பலர் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். இந்து முன்னணி சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 60 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் 30-வது ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் நடக்கிறது. இந்த ஊர்வலம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் இருந்து புறப்பட்டு காமராஜர் வளைவு வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று காந்தி சிலையை அடைகிறது. அங்கு சேகரிக்கப்படும் விநாயகர் சிலைகள் திருச்சிக்கு சரக்கு வாகனங்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளதால், பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை சரக்கு வாகனங்களில் சேர்க்கலாம் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில் விநாயகர் சன்னதி, நான்கு ரோடு அருகே மின்வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவில், தீரன்நகரில் உள்ள விநாயகர் கோவில், சிதம்பரம் நகரில் உள்ள பாலமுத்துகுமாரசாமி கோவில், சிவன் கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி, கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story