மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: காங்கிரஸ் 111, தேசியவாத காங்கிரஸ் 104 தொகுதிகளில் போட்டி - நவாப் மாலிக் தகவல்


மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: காங்கிரஸ் 111, தேசியவாத காங்கிரஸ் 104 தொகுதிகளில் போட்டி - நவாப் மாலிக் தகவல்
x
தினத்தந்தி 8 Sep 2019 11:15 PM GMT (Updated: 8 Sep 2019 8:32 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 111 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 104 தொகுதிகளிலும் போட்டியிடும் என நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபையின் தற்போதைய பதவி காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. அடுத்த மாதம்v(அக்டோபர்) தேர்தல் நடைபெறும் என கருதப்படுகிறது. எனவே மராட்டிய சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன.

இவ்விரு கூட்டணியில் சிறிய கட்சிகளும் இடம் பெற்று உள்ளன.

சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பா.ஜனதா, சிவசேனா மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவர் நவாப் மாலிக் கூறியதாவது:-

மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் 111 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 104 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 73 இடங்களை கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்குவது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் போட்டியிடும். இதில் எங்களது வேட்பாளர்கள் தற்போது சிவசேனா வசம் உள்ள ஒர்லி, குர்லா, அணுசக்தி நகர், விக்ரோலி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், காங்கிரசின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 14-ந் தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் கட்சியின் உயர்மட்ட குழு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், இதில், 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Next Story