ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம்


ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2019 11:45 PM GMT (Updated: 8 Sep 2019 11:04 PM GMT)

ப.சிதம்பரம் கைதை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தங்களுடைய பழிவாங்கும் படலத்தை தொடங்கி உள்ளது. இந்த போக்கு மிகவும் கண்டிக்கதக்கது. பொருளாதாரத் துறையில் மிகச் சிறந்த வல்லுனர்களும், காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இந்திய நாட்டின் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டாமல் அரசியல் சுயலாபத்திற்காக பழிவாங்க துடிக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் செயல் மிகவும் கண்டிக்கதக்கதாகும்.

மத்திய நிதியமைச்சராக, உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ப.சிதம்பரம் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொய் வழக்குப் போட்டு கைது செய்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று(திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய்தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

மத்திய அரசை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story