தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை


தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை
x
தினத்தந்தி 9 Sep 2019 10:00 PM GMT (Updated: 9 Sep 2019 7:15 PM GMT)

தேனி பஸ் நிலையத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த மூதாட்டியிடம் 32 பவுன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பூஞ்சோலை பாரதிநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 65). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக பழனிசெட்டிபட்டியில் இருந்து புறப்பட்டு தேனியில் உள்ள கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

வீட்டில் இருந்து வரும் போது அவர் தனது 32 பவுன் நகைகளை ஒரு மஞ்சள் பையில் வைத்து அதை மற்றொரு பைக்குள் வைத்து எடுத்து வந்தார். பஸ்நிலையத்தில் பஸ்சில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் தான் கொண்டு வந்த பையை பார்த்தபோது நகைகள் வைத்து இருந்த மஞ்சள் பையை காணவில்லை.

யாரோ மர்ம நபர், மஞ்சள் பையோடு 32 பவுன் நகைகளையும் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த திருட்டு தொடர்பாக பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story