காட்பாடியில் தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு ; இருசக்கர வாகனத்தையும் ஓட்டிச்சென்றனர்


காட்பாடியில் தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு ; இருசக்கர வாகனத்தையும் ஓட்டிச்சென்றனர்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 6:27 PM GMT)

காட்பாடியில் தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை, பணத்தை திருடிக்கொண்டு, இருசக்கர வாகனத்தையும் ஓட்டிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்பாடி,

காட்பாடி பாலு நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 53). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் வெளியூர் சென்றிருந்தார். இதனால் நேற்று முன்தினம் இரவு அவருடைய மனைவியும், மகனும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

வீட்டின் சாவி, பீரோ மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவியை அங்குள்ள ஒரு இடத்தில் தொங்கவிட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கு சாமுவேல் மனைவி மற்றும் மகன் தூங்கிய அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, அங்கு தொங்கவிடப்பட்டிருந்த பீரோ மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துள்ளனர்.

பின்னர் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகையை திருடி உள்ளனர். மேலும் வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் ஓட்டிச்சென்றுவிட்டனர்.

நேற்று காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் உள்ளவர்கள் மூலமாக வீட்டை திறந்து வெளியே வந்தனர்.

பின்னர் இதுகுறித்து விருதம்பட்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story