சோழிங்கநல்லூரில் விலையில்லா மடிக்கணினி கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏ. வீடு முற்றுகை


சோழிங்கநல்லூரில் விலையில்லா மடிக்கணினி கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏ. வீடு முற்றுகை
x
தினத்தந்தி 12 Sep 2019 10:45 PM GMT (Updated: 12 Sep 2019 7:12 PM GMT)

சோழிங்கநல்லூரில் விலையில்லா மடிக்கணினி கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேசின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து கடந்த வாரம் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செம்மஞ்சேரி போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வாரத்தில் வழங்கப்படுவதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்து கேட்டனர். மடிக்கணினி வரவில்லை என பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறியதால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் அங்கிருந்த மாணவர்களை கலைந்து போக செய்தனர். அங்கிருந்து கிளம்பிய மாணவர்கள் நேராக சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ் வீட்டிற்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ. அரவிந்த்ரமேஷ் மாணவர்களிடம் விவரத்தை கேட்டறிந்தார்.

உடனே இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கும், முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் செல்போன் மூலமாக எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதிக்கு முன்பாக மடிக்கணினி வழங்குவதாக அதிகாரிகள் கூறியதாக எம்.எல்.ஏ மாணவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story