சிவகாசி காமராஜர் சிலை பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்


சிவகாசி காமராஜர் சிலை பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:00 PM GMT (Updated: 12 Sep 2019 11:15 PM GMT)

சிவகாசி காமராஜர் சிலை பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

சிவகாசி, 

சிவகாசி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் நான்கு ரோடு சந்திப்பில் காமராஜர் சிலை உள்ளது. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், தபால் அலுவலகம், அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட், பத்திரப்பதிவு அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அலுவலகத்தின் வாசலில் தான் நிறுத்தி வைக்கப்படு கிறது. இவ்வாறு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் எதிர்திசைக்கு செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இப்படி போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த சாலையில் தற்போது அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து அந்த சாலை முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அந்த பகுதியை கடந்த செல்ல மற்ற வாகனங்கள் பெரும் சிரமப் படுகிறது. அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் எதிர்புறம் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாலும் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்துக்கு பாதிப்புள்ள இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

சிவகாசி பகுதியில் நாளுக்கு, நாள் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. போக்குவரத்து விதிகளும் கடைபிடிப்பதில்லை. இதனால் விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story