திருவெண்காடு அருகே ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விரட்டி அடித்த விவசாயிகள்-பரபரப்பு


திருவெண்காடு அருகே ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விரட்டி அடித்த விவசாயிகள்-பரபரப்பு
x
தினத்தந்தி 14 Sep 2019 11:15 PM GMT (Updated: 14 Sep 2019 6:48 PM GMT)

திருவெண்காடு அருகே குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விவசாயிகள் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெண்காடு,

நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எண்ணெய் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது விளைநிலங்களில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்களில் விளைநிலங்களில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலும், குழாய்கள் பதிக்கப்படாமலும் உள்ளது.

இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் விவசாயிகள், சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக விளைநிலங்களில் தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடும்படி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், விளைநிலங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலேயே உள்ளன.

இந்த நிலையில் நேற்று ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள், விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள், சம்பா சாகுபடி செய்ய இருப்பதால் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடும்படி கேட்டனர். இது தொடர்பாக ஓ.என்.ஜி.சி. ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த விவசாயிகள், ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை விரட்டி, விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story