கீரிப்பாறை எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி சாவு போலீஸ் விசாரணை


கீரிப்பாறை எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி சாவு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 16 Sep 2019 10:15 PM GMT (Updated: 16 Sep 2019 8:07 PM GMT)

கீரிப்பாறையில் எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.

பூதப்பாண்டி,

குமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த செங்கோடி செங்கன்கழிவிளை பகுதியை சேர்ந்தவர் கோலப்பன் (வயது 85). இவருக்கு லீலா (58) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். கோலப்பன் கீரிப்பாறையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு தனியார் எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த எஸ்டேட் மலை பகுதியில் உள்ளதால் இரவு நேரங்களில் வேலிகளை தாண்டி வரும் காட்டுபன்றிகளை துரத்துவதற்காக கோலப்பன் தனது அறையில் எப்போதும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருப்பது வழக்கம். இந்தநிலையில், கோலப்பன் உடல் நலக்குறைவால் கடந்த 2 மாதங்களாக விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

வெடிகுண்டு வெடித்தது

நேற்று காலையில் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு வந்தார். அங்கு தனது அறைக்கு சென்று பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கையில் எடுத்தபோது, அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் கோலப்பனின் கை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

சாவு

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோலப்பனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோலப்பனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தனியார் எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story