மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி - சரத்பவார் அறிவிப்பு


மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி - சரத்பவார் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:30 PM GMT (Updated: 16 Sep 2019 10:30 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் அறிவித்து உள்ளார்.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானலும் வெளியாக உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இரு அணிகளும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சமீபத்தில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் என்று நேற்று சரத்பவார் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சட்டசபை தேர்தலில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசம் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும். எஞ்சிய 38 தொகுதிகள் கூட்டணியில் சேரும் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. தேசியவாத காங்கிரசில் இந்த தடவை புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கடந்த (2014) சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 42 தொகுதிளிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தல் மூலம் 15 ஆண்டுகாலம் தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி வந்த இந்த கட்சிகள் பா.ஜனதா, சிவசேனாவிடம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story