பூம்புகாரில் வன்னியர் சங்க மாநாடு டாக்டர் ராமதாஸ் தகவல்


பூம்புகாரில் வன்னியர் சங்க மாநாடு டாக்டர் ராமதாஸ் தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 6:55 PM GMT)

பூம்புகாரில் வன்னியர் சங்க மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

ஜெயங்கொண்டம்,

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு மறைந்து ஓராண்டு ஆகிறது. இந்த நிலையில் அவருக்கு பா.ம.க. சார்பில் அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளரும், வன்னியர் சங்க மாநில செயலாளருமான க.வைத்திலிங்கம் வரவேற்றார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மணி மண்டபத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குருவை கொல்வதற்கு பலர் பல்வேறு வகையில் சூழ்ச்சி செய்து திட்டமிட்டார்கள். அதிலிருந்து அவரை நானும் ஜி.கே.மணியும் காப்பாற்றினோம். தற்போது நம் கட்சியை தோற்கடிப்பதற்கு பலவகையில் எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்கின்றனர்.

பொதுநல வழக்கு தொடர முடிவு

அதற்கு நம் சமுதாயத்தினர் சிலர் விலை போய் நமக்கு எதிராக விமர்சனம் செய்கின்றனர். எனக்கு பதவி ஆசை கிடையாது. எனது லட்சியம் தமிழகத்தை காக்க வேண்டும் என்பதுதான். டாக்டர் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சங்கம் மாநாடு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதை அடுத்து பூம்புகாரில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நம் கட்சியினர் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது என்று நான் முன்னரே கோரிக்கை வைத்திருந்தேன். இருப்பினும் தற்போது உங்களிடத்தில் மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன். அதேபோன்று சுவர் விளம்பரமும் எழுதக்கூடாது என்று நம் கட்சி சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். காடுவெட்டி கிராமத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அன்புமணி ஏற்பாடு செய்வார். குரு மணிமண்டப திறப்பு விழாவிற்கு அனைத்து விதத்திலும் ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்

பலவீனம்

தொடர்ந்து விழாவிற்கு முன்னிலை வகித்த மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

பா.ம.க. ஆள வேண்டும் என்பதே குருவின் ஆசையாக இருந்தது. அதற்காக அவர் கடின உழைப்பு மேற்கொண்டவர். இருந்தபோதும் நாம் தோல்வியை சந்திக்கிறோம். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நீங்கள் சிந்தித்துப்பார்த்தது உண்டா?. நம் மக்களின் எண்ணிக்கை நமக்கு பலம், நம்மிடையே ஒற்றுமையின்மை நமது பலவீனமாக உள்ளது. இதை எதிர்க்கட்சிகள் நன்கு பயன்படுத்தி சூழ்ச்சி செய்து பிரிவினை ஏற்படுத்தி அதை தந்திரமாக கையாளுகிறார்கள். நாம் அதற்கு இடம் கொடுத்து இரையாகிறோம். அதனால் தான் தோற்று விடுகிறோம் என்பதை நீங்கள் இன்னும் உணராமல் இருப்பது தான் எனக்கு வேதனையாக உள்ளது.

தமிழகத்தை யார் யாரோ ஆண்டார்கள். நான் கேட்பது, தமிழகத்தை நாங்களும் ஆள வேண்டும் என்கிறோம். பிற சமுதாய தலைவர்கள், தான் சார்ந்த சமுதாயத்திலுள்ள மற்ற தலைவர்களை பற்றி ஒருபோதும் விமர்சிப்பதில்லை. ஆனால், நாம் சார்ந்த சமூகத்தினர் மருத்துவர் அய்யாவை பற்றி சிலர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து விமர்சனம் செய்கின்றனர். விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிசை வாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் எல்லாம் இன்னும் முன்னேறாமல் உள்ளனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் சரி செய்து விடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் பாதுகாப்பு

விழாவில் அரியலூர் மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குன்னம் ஆர்.டி.ஆர்.ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், குருவின் மனைவி லதா, மகன் கனலரசன், பா.ம.க. வக்கீல் பாலு, அரியலூர் சிறப்பு மாவட்ட செயலாளர் பூ.ரெ.கண்ணன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி, ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி நன்றி கூறினார். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Next Story