போடிமெட்டு மலைப்பாதை விபத்தில் மேலும் ஒருவர் சாவு அதிக பயணிகளுடன் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு


போடிமெட்டு மலைப்பாதை விபத்தில் மேலும் ஒருவர் சாவு அதிக பயணிகளுடன் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:45 PM GMT (Updated: 17 Sep 2019 8:37 PM GMT)

போடிமெட்டு மலைப்பாதையில் பள்ளத்தில் ஜீப் பாய்ந்த விபத்தில் மேலும் ஒருவர் நேற்று இறந்தார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து அதிக பயணிகள் சென்ற ஜீப்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

போடி,

தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட ஜீப்களில் கேரளாவில் உள்ள குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலக்காய் மற்றும் காபி தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செல்கின்றனர். அவர்கள் கம்பம்மெட்டு, போடிமெட்டு மற்றும் குமுளி ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

இந்த ஜீப்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் போடிமெட்டு மலைப்பாதையில் கேரளாவில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து 3 பேர் பலியாகினர். இதற்கிடையே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ணைத்தோப்பு கிராமத்தை சேர்ந்த நூர்ஜகான் (வயது 48) என்பவர் நேற்று இறந்தார். இதனை தொடர்ந்து விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

போலீசார் அனுமதி மறுப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய மலைப்பாதைகளில் செல்லும் ஜீப்களை சோதனை செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று காலை கம்பம்மெட்டு மலைப்பாதையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பவுன்ராஜ், கணேசன், ராமகிருஷ்ணன், ரங்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஜீப்களை கேரளாவுக்கு செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

இதேபோல் போடிமெட்டு, குமுளி மலைப்பாதைகளில் போலீசார் சோதனையில் பயணிகளை அதிகம் ஏற்றி சென்ற ஜீப்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மலைப்பாதை வழியாக பெண்கள் நடந்து சென்று, வேறு பகுதியில் மீண்டும் ஜீப்பில் செல்வதற்கும் போலீசார் தடை விதித்தனர். இதை தொடர்ந்து தொழிலாளர்கள் பஸ்களில் ஏறி வேலைக்கு சென்றனர். இன்னும் சில தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீடு திரும்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story