பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி


பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 7:19 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சாலையில் சென்றதை காண முடிந்தது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி மொத்தம் 174 மில்லி மீட்டர் மழையும், 14-ந்தேதி 366 மில்லி மீட்டர் மழையும், 15-ந்தேதி 101 மில்லி மீட்டர் மழையும், 16-ந்தேதி 249 மில்லி மீட்டர் மழையும், நேற்று முன்தினம் 228 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

ஏரிகள் நிரம்பின

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கீழப்பெரம்பலூர், வடக்கலூர் ஆகிய 2 ஏரிகள் நிறைந்துள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்டத்தில் பெய்த மழையினால் குளம், குட்டைகளும் நிரம்பின. ஆயக்குடி ஏரி 50 சதவீதமும், மேலும் 8 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் பெருகியுள்ளது.

ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருவதற்கு காரணம் மழைக்காலங்களுக்கு முன்னதாகவே அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் அதன் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதும், அதன் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றதே என்று விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வீடுகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே செப்டம்பர் மாதத்தில் பெய்த மழையிலேயே ஏரிகள் நிரம்பியது இதுவே முதல்முறை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story