நாகர்கோவிலில் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி போலீசார் விசாரணை


நாகர்கோவிலில் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Sep 2019 10:45 PM GMT (Updated: 19 Sep 2019 7:51 PM GMT)

நாகர்கோவிலில் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளியின் உடலை போலீசார் மீட்டனர். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பீச்ரோடு அருகே பாழடைந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் இதற்கு முன்பு கூட்டுறவு பண்டகசாலை செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நேசமணிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக தொங்கினார். போலீசார் அந்த ஆணின் உடலை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிணமாக கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மனம் உடைந்தார்

இதில், தூக்கில் பிணமாக தொங்கியவர் நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்த ராஜேஷ் (வயது 40) என்பதும், மரபாலீஷ் செய்யும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. இந்தநிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து, சென்னையில் குழந்தைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நிலையில் ராஜேஷ் இருந்துள்ளார். மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த அவர் தன்னுடன் வேலை செய்த தொழிலாளர்களிடம், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். கடந்த 17-ந் தேதி வேலைக்கு சென்ற ராஜேஷ் வேலை முடிந்து வந்து அன்று இரவு பாழடைந்த கட்டிடத்திலேயே தங்கியிருக்கிறார். இரவில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story