திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி


திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 8:28 PM GMT)

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, மணவாளநகர், அரண்வாயல், புட்லூர், செவ்வாப்பேட்டை, பெருமாள்பட்டு, திருமழிசை, வெள்ளவேடு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் திருவள்ளூர் பூங்காநகர் சிவாவிஷ்ணு கோவில் தெரு, புங்கத்தூர் பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது.

மேலும் திருவள்ளூரை அடுத்த புங்கத்தூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகத்தை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் மாணவ- மாணவிகள் அவதிக்குள்ளானார்கள். சிவாவிஷ்ணு கோவில் தெருவில் மரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை சீராக்கினர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கன்னியம்மன் நகரில் பலத்த மழையின் காரணமாக அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு அவர்கள் தங்க மாற்று இடம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழைநீர் புகுந்தது.

எம்.எல்.ஏ. ஆய்வு

திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் மழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையம் அருகேயுள்ள குளக்கரை பகுதி, புங்கத்தூர் அம்சாநகர், என்.ஜி.ஓ. காலனி, எம்.ஜி.ஆர். நகர், ஹவுசிங் போர்டு போன்ற பகுதிகளுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு எம்.எல்.ஏ. மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் தங்க மாற்று இடம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் திருவள்ளூர் அம்சா நகரில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி குப்பன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மகிமைதாஸ், தி.மு.க. நிர்வாகிகள் பாபு, துரைராஜ், செல்வகுமார், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story