பயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்


பயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 7:31 PM GMT)

பயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்குடையை தூய்மை செய்து பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ்நிலையம் எதிரே உள்ள சாலையில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களும், பஸ்நிலையம் முகப்பு பகுதியில் கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும் நின்று செல்கின்றன. இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருந்துவந்தது. இதனால் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் நின்றபடி பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கவேண்டிய அவலநிலை இருந்துவந்தது. இந்தநிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் (மருதராஜா) தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பயணிகள் நிற்பதற்காக குளித்தலை பஸ்நிலையம் அருகே ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இதையடுத்து சில நாட்கள் மட்டுமே இந்த நிழற்குடை பகுதியில் பஸ்கள் நின்று சென்றது. பின்னர் வழக்கம்போல் கடைகள் அமைந்துள்ள பகுதியிலேயே பஸ்கள் நின்று சென்றுவந்தன. இதனால் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நிழற்குடை தூய்மையின்றி பயன்பாடு இல்லாமல் போனது. இதையடுத்து திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் குளித்தலை பஸ்நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடை பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை

இந்தநிலையில் நேற்று குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து போலீசார் இந்த பயணிகள் நிழற்குடையை தூய்மைபடுத்தினர். பின்னர் பஸ்நிலையம் அருகே இருந்த பயணிகளிடம் திருச்சி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் இந்த நிழற்குடையில் காத்திருக்கலாமென தெரிவித்தார்.

நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நிற்காத பஸ்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்குக்கு பிறகு பஸ்கள் அனைத்தும் நிழற்குடை பகுதியில் நின்று செல்ல தொடங்கியது. இதற்கான நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசாரை பயணிகள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.


Next Story