புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 8:00 PM GMT)

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில்,

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆகும். இதையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பெருமாளை தரிசிப்பதற்காக காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலிலும் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும், 9 மணிக்கு உற்சவமூர்த்திக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

திரளான பக்தர்கள் தரிசனம்

இந்த கோவிலிலும் காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்டவரிசையில் காத்திருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், கோட்டார் வாகையடி ஏழகரம் பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன.

Next Story