கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 21 Sep 2019 11:15 PM GMT (Updated: 21 Sep 2019 9:29 PM GMT)

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருகிற 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர மாநில அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தின் பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை வெறும் 2.2 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதுவும் மார்ச் மாதம் 26-ந்தேதியுடன் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போனதுடன், மாநகரில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு, ஆந்திர மாநில முதல்-மந்திரிக்கு கோரிக்கை விடுத்தது. இதற்கிடையே கடந்த 10-ந்தேதியில் இருந்து ஆந்திர மாநிலம் சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் கண்டலேறு அணைக்கு 8.61 டி.எம்.சி. தண்ணீர் வந்து உள்ளது. இதனை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 24-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கண்டலேறு அணை விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. அதனால் அந்த அணையில் இருந்து வரும் 24-ந்தேதி (செவ்வாய்கிழமை) தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக கிருஷ்ணா கால்வாயில் சிறிதளவு தண்ணீர் ஓடுகிறது.

எனவே, கண்டலேறு அணை திறந்த ஒரு சில தினங்களில் கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டைக்கு வந்தடையும். இந்த நீர் அடுத்த வார இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் பூண்டி ஏரிக்கு வர வாய்ப்புள்ளது. அதன்பிறகு சென்னை மாநகருக்கு முறையாக வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 18-ந்தேதி பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story