பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை பயணிகள் கோரிக்கை


பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2019 10:15 PM GMT (Updated: 21 Sep 2019 9:31 PM GMT)

பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி சிவா எம்.பி.யிடம், பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், பட்டுக்கோட்டை நகர தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் பயணிகள் சங்க நிர்வாகிகளை கொண்ட குழுவினர் திருச்சி கோட்ட ரெயில்வே நிலைக்குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.யிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர்-பட்டுக்கோட்டை -காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டன. இந்த வழித்தடத்தில் ரெயில்வே கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால் ரெயில் போக்குவரத்து முறையாக நடைபெறவில்லை. தேவையான எண்ணிக்கையில் கேட் கீப்பர்களை நியமித்து தொடர்ந்து ரெயில் இயக்கவும், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீபாவளி முதல்...

வருகிற தீபாவளி பண்டிகை முதல் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை-திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி சிவா எம்.பி. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story