சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு


சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 24 Sept 2019 3:37 AM IST (Updated: 24 Sept 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் சுவர்ணபுரி கலைமகள் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 33). கிரானைட் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அவர் வெளியூர் சென்றார். பின்னர் ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததுடன், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழில் அதிபர் ஜாகீர் உசேன் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருட்டு நடந்த வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஜாகீர் உசேன் வீடு பூட்டி கிடப்பதை மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு உள்ளனர். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டின் வெளியே உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இதில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story