ஆக்கிரமிப்பு அகற்றி மழை நீர் செல்ல கால்வாய்கள் அமைப்பு


ஆக்கிரமிப்பு அகற்றி மழை நீர் செல்ல கால்வாய்கள் அமைப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 8:22 PM GMT)

அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் செல்வதற்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டது.

அன்னவாசல்,

அன்னவாசல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குளங்களில் தண்ணீர் வற்றியது. இந்த நிலையில் அன்னவாசல் பகுதிகளில் உள்ள இலுப்பூர், மேட்டுச்சாலை, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், கிளிக்குடி, வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு, குமரமலை, கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், மாங்குடி, ஆரியூர், பெருஞ்சுனை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

கோரிக்கை

இந்த மழையால் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர தொடங்கியுள்ளது. குளங்கள், குட்டைகள், கிணறுகளில் தண்ணீர் நிரம்ப தொடங்கி உள்ளது. அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி கிராமத்தில் சரியான வரத்துவாரி இல்லாததால் பெரிய கண்மாய்க்கு செல்லவேண்டிய மழைநீர் ஊருக்குள் சென்று வீடுகளை சுற்றி நிரம்பி கிடக்கின்றது. எனவே கிளிக்குடி பெரிய கண்மாய்க்கு வரும் வாரிகளை சுத்தப்படுத்தி ஆக்கிரமிப்பை அகற்றி முறையாக கண்மாய்க்கு மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சீரமைப்பு

இதுகுறித்த செய்தி நேற்று ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. இதனைத்தொடர்ந்து வருவாய்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வருவாய் ஆய்வாளர் ராமகிரு‌‌ஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சவுந்தர்யா, ஊராட்சி செயலாளர் சக்திவேல் முன்னிலையில், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வீடுகளில் சூழ்ந்திருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட வருவாய்துறை, மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story