பெங்களூருவில் இன்று நடக்கிறது: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் - வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை


பெங்களூருவில் இன்று நடக்கிறது: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் - வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 25 Sep 2019 10:48 PM GMT (Updated: 25 Sep 2019 10:48 PM GMT)

கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 30-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மனு தாக்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதில் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், சித்தராமையா உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பட்டியலுக்கு மேலிடம் ஒப்புதல் வழங்கும்.

அதன் பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் (சனிக்கிழமை) காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) உயர்மட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story