கேரளாவுக்கு வேனில் கடத்திய 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது


கேரளாவுக்கு வேனில் கடத்திய 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 29 Sep 2019 3:34 PM GMT)

கேரளாவுக்கு வேனில் கடத்திய 3 டன் ரே‌ஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ரோந்து சென்றும், போலீசாரும் வாகன சோதனை நடத்தியும் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தனிப்படை சப்–இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையிலான போலீசார் கருங்கல் அருகே மேல குறும்பனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது, அதில் சிறு, சிறு மூடைகளில் ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3 டன் ரே‌ஷன் அரிசி

இதனையடுத்து, வேனில் இருந்த 3 டன் ரே‌ஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வேனையும், அதனுடன் வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். டெம்போவில் வந்த பாறசாலை இஞ்சிவிளையை சேர்ந்த நிஷாந்த் (வயது 30), சவுத் (30) மற்றும் களியக்காவிளையை சேர்ந்த அஜ்மல்கான் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் 3 டன் ரே‌ஷன் அரிசியையும், கைதான 3 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ரே‌ஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட்டதும் தெரியவந்தது.


Next Story