கடன் தொல்லை: லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லை: லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Sep 2019 9:45 PM GMT (Updated: 29 Sep 2019 4:57 PM GMT)

கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கம்பம்,

கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் சுருளி(வயது 46). இவர் சொந்தமாக லாரி வைத்து அதை அவரே ஓட்டி வந்தார். இவருக்கு கன்னிகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். அவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டினார். இதற்காக அவர் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக லாரி ஓட்டம் இல்லாததால் சுருளி வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருக்கு கடன்தொல்லை அதிகரித்தது. மேலும் பணம் இல்லாததால் லாரிக்கு தகுதி சான்று பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 27-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இந்நிலையில் மணிகட்டி ஆலமரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் சுருளி வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நேற்று காலை அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இதுபற்றி கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதையொட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story