தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற எலக்ட்ரீசியன் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை


தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற எலக்ட்ரீசியன் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Sep 2019 10:45 PM GMT (Updated: 30 Sep 2019 7:26 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் இறந்துகிடந்ததையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள எரவாங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 48). எலக்ட்ரீசியனான இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியை நிறுத்துவதற்கான மந்திர கயிறு அணிந்து கொண்டு மது குடிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் அவ்வப்போது வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது மனைவி கீதா(40) தனது கணவர் மணிகண்டனை ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே உள்ள எழில் மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது அங்கு அனுமதி சீட்டு (ஓ.பி.) வாங்கிக்கொண்டு டாக்டரை பார்ப்பதற்காக காத்திருந்தனர். அப்போது தனது மனைவி கீதாவிடம், மணிகண்டன் டீ வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டார். பின்னர் வந்து பார்த்தபோது தனது கணவன் காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம சாவு

தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த மற்றொரு நோயாளிக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக மருத்துவ ஊழியர் எக்ஸ்ரே அறைக்கு அழைத்து சென்றபோது, அங்கு மணிகண்டனின் கழுத்தில் எக்ஸ்ரே எந்திரத்தின் வயர் இறுகிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவ ஊழியர்கள், இதுகுறித்து மருத்துவரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மணிகண்டனுக்கு கீர்த்தனா(15) என்ற மகள் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story