நீட்தேர்வு ஆள் மாறாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்


நீட்தேர்வு ஆள் மாறாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 3:08 PM GMT)

நீட்தேர்வு ஆள் மாறாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் நாடு முழுவதும் பாத யாத்திரை நடந்தது.

அதே போல குமரி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் நாகர்கோவிலில் பாத யாத்திரை சென்றனர். இதையொட்டி நாகர்கோவில் வடசேரி காந்தி பூங்காவில் பா.ஜனதா கட்சியினர் திரண்டனர். அவர்கள் அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பாத யாத்திரையை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, அவரும் நடந்து சென்றார்.

அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, பசுமையை காப்பது, நீர்வளத்தை பேணுவது உள்ளிட்டவை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

காந்தியின் ஆசை

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு பிரதமர் நரேந்திரமோடி பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாத யாத்திரை நடக்கிறது.

மகாத்மா காந்தி விரும்பிய வி‌ஷயங்களில் ஒன்று மட்டும் நடைபெறாமல் போய்விட்டது. அது என்னவென்றால் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் என்று அவர் கூறினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. அந்த ஆசை நிறைவேறி இருந்தால் நம் நாடு சுபிட்சம் பெற்றிருக்கும்.

கடும் நடவடிக்கை

நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏழை வீட்டு குழந்தைகள் ஆள் மாறாட்டம் செய்ய மாட்டார்கள். நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தை தடுக்க அந்தந்த மாநிலங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். நீட் தேர்வு கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் மருத்துவத்தில் எவ்வளவு மோசடிகள் நடந்திருக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். மாணவர்கள் மன உறுதியோடு இருப்பது அவசியம்.

மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணங்களை தடுக்க உளவியல் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். கனரா வங்கியில் அதிகபட்சமாக வட மாநிலத்தவர்கள் வேலை பெற்று உள்ளதாக கூறுகிறார்கள். பொதுவாக தமிழக மாணவர்கள் மத்திய அரசு பணிகளுக்கு அதிக அளவில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாட புத்தகத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதை யாரும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை. பகவத்கீதை வாழ்க்கைக்கு வழிகாட்டும் அற்புதமான நூல். அதை மதரீதியாக பார்க்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாநகர தலைவர் நாகராஜன், தேவ், மீனாதேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய பாத யாத்திரையானது நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்றது. பின்னர் மாலையில் ராமன்புதூர் சந்திப்பில் முடிவடைந்தது.


Next Story