கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:15 PM GMT (Updated: 6 Oct 2019 8:24 PM GMT)

தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு 3 மடங்கு குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நவீனமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆஸ்பத்திரியில் ரூ.3.60 கோடி செலவில் கேத் லேப் (இருதயம் சம்பந்தப்பட்ட ஆய்வகம்), ரூ.1.57 கோடி செலவில் இணைப்பு நடைபாதை, ரூ.3 லட்சம் மதிப்பில் மின் அதிர்வு சிகிச்சை பிரிவு, ரூ.12 கோடி மதிப்பில் 24 மணி நேர தாய் சேய் அவசர சிகிச்சை பிரிவு, ரூ.40 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட முற்றிலும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட மொத்தம் ரூ.21 கோடியே 30 லட்சம் மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று கேத் லேப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் உடன் இருந்தனர். இதனையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்தில் தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக புதிய கருவி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் குமரி மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும். குமரி மாவட்ட மருத்துவ கல்லூரியில் சிறப்பு மருத்துவர்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், வெளியூர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூற முடியாது. மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க கூடிய ஸ்டாப் நர்சுகள் 508 பேருக்கு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் மற்றும் 500 டாக்டர்களுக்கு அடுத்த வாரம் முதல்-அமைச்சர் மூலம் பணி ஆணை வழங்கப்படும்.

குமரி மாவட்டத்தில் 29 பேர் காய்ச்சலால் உள்நோயாளிகளாக ஆஸ்பத்திரிகளில் உள்ளனர். இதில் 6 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சலால் தெலுங்கானாவில் 10 ஆயிரம் பேரும், சிங்கப்பூரில் 12 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, தர்மபுரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் காய்ச்சல் நோயாளிகள் அதிகமாக வருகிறார்கள். அவர்களை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வருமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட 3 மடங்கு குறைந்திருக்கிறது.

கேரளாவில் 70 சதவீத பிரசவம் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடக்கின்றன. 30 சதவீத பிரசவம் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. 70 சதவீத பிரசவம் அரசு ஆஸ்பத்திரிகளில் நடக்கிறது. எனவே கேரளாவில் டாக்டர்களுக்கு அதிக சம்பளம் என்றும், தமிழக அரசு டாக்டர்களுக்கு சம்பளம் குறைவு என்றும் ஒப்பிட்டு கூற கூடாது. அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்க வாய்ப்பு இல்லை.

நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சமீபத்தில் 580 கிராம் எடையில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அரசு டாக்டர்கள் சீராக பராமரித்து குழந்தையின் உயிரை காப்பாற்றி உள்ளனர். தற்போது அந்த குழந்தையின் எடை அதிகரித்ததோடு நலமாகவும் இருக்கிறது. எனவே அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது அளிக்கப்படும்.

குமரி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதாக கூற முடியாது. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பிறவியிலேயே காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர் அந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், “சென்னையில் மட்டும் பிறவியிலேயே காது கேளாத குழந்தைகள் 3,800 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டும் என்றால் ரூ.14 லட்சம் செலவாகும். அதுவே அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்“ என்றார்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்துரு, ஜெயசீலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜி நாதன், ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ்டெவி, உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், துணை முதல்வர் லியோடேவிட், டாக்டர்கள் அருள்பிரகாஷ், ரெனிமோள், நாகர்கோவில் மாநகர நல அதிகாரி கின்ஷால் உள்பட ஏராளமான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story