வரத்து வாய்க்காலை மூட எதிர்ப்பு 2-வது முறையாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்


வரத்து வாய்க்காலை மூட எதிர்ப்பு 2-வது முறையாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 8 Oct 2019 9:24 PM GMT)

வரத்து வாய்க்காலை மூட எதிர்ப்பு தெரிவித்து 2-வது முறையாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் தற்போது திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கீழப்பழுவூரில் உள்ள கருங்குளம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலை சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதை மூடிவிட்டு வேலையை தொடர்ந்தனர். இதனால் மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விழும் மழைநீரும், அருகே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியவுடன் அதில் இருந்து வரும் உபரி நீரும் இந்த வாய்க்கால் வழியே கருங்குளம் ஏரிக்கு செல்வது தடைபடும் என்பதால், ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் அந்த வரத்து வாய்க்காலை மூடக்கூடாது என கடந்த வாரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்த இடத்தை முற்றுகையிட்டு திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முற்றுகை

இதில் விவசாயிகள் மூடிய வாய்க்காலில் மீண்டும் பறித்து அதனை ஆழப்படுத்தி இடையே பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவுபடுத்தும் பணியைநிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் வாய்க்காலை மூடிவிட்டு பணியை தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கூடிய விரைவில் வாய்க்காலை மீண்டும் அகலப்படுத்தி பாலம் அமைத்து தராமல் பணியை மீண்டும் தொடர்ந்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தற்போது அங்கு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாயிகள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story