குமரி போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்த கேரள ஆட்டோ டிரைவர்கள்


குமரி போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்த கேரள ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 4:54 PM GMT)

குமரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்த கேரள ஆட்டோ டிரைவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லையான பாறசாலை, ஊரம்பு, செங்கவிளை, பளுகல், நெடுவான்விளை பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இரு மாநில நிர்வாகத்தின் ஒப்பந்த அடிப்படையில் தமிழக-கேரள எல்லையையொட்டி 6 கிலோ மீட்டர் தூரம் அனுமதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது தமிழக பகுதிக்குள் வரும் கேரள பதிவெண் கொண்ட ஆட்டோக்களை மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நடவடிக்கைக்கு கேரள ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எல்லையில் தடுத்து நிறுத்தம்

இந்த நிலையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலரை கண்டித்தும், ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதை கண்டித்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட கேரள ஆட்டோ டிரைவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை பி.பி.எம்.சந்திப்பில் கேரள டிரைவர்கள் திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த இருமாநில போலீசாரும் எல்லையில் குவிந்தனர். பின்னர் கேரள ஆட்டோ டிரைவர்கள் குமரி மாவட்டத்திற்குள் நுழைய முயன்றனர். உடனே இருமாநில போலீசாரும் ஆட்டோ டிரைவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதனையடுத்து போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இருமாநில ஒப்பந்தப்படி தமிழக ஆட்டோ டிரைவர்கள் தற்போதும் கேரள மாநிலத்தில் 6 கிலோ மீட்டர் தூரம் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

ஆனால் அதே ஒப்பந்தப்படி நாங்கள் குமரி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்கினால் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, பழைய ஒப்பந்தப்படி குமரி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பு

இதற்கு உரிய மேல்நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குமரி மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற ேகரள ஆட்டோ டிரைவர்களை போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story