தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை வெட்டி கொன்று நகைகள் கொள்ளை


தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை வெட்டி கொன்று நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 8:46 PM GMT)

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை வெட்டி கொன்றுவிட்டு, 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள மங்கலம் பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாத்தையா. விவசாயி. அவருடைய மனைவி தில்லையம்மாள் (வயது 60). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சாத்தையாவின் மகன் ஓசூரில் வசித்து வருவதால், அவர் அங்கு தங்கியிருந்து கண்ணுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தில்லையம்மாள் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்தில் பலத்த வெட்டு விழுந்து, தில்லையம்மாள் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் தில்லையம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்சங்கிலி மற்றும் கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 7 பவுன் நகைகளை அந்த கொள்ளையர்கள் கழற்றி எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் தில்லையம்மாள் தனது வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை அக்கம்பக்கத்தினர் நேற்று காலையில் கவனித்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து ஆறாவயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிவகங்கையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடி சற்று தூரத்தில் போய் நின்றது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடு புகுந்து பெண்ணை கொன்று, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Next Story