ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியை கலைக்க தயாராகி வருகிறார்கள் - நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியை கலைக்க தயாராகி வருகிறார்கள் - நாங்குநேரியில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2019 11:15 PM GMT (Updated: 10 Oct 2019 8:47 PM GMT)

ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களே ஆட்சியை கலைக்க தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

நெல்லை, 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையில் நாங்குநேரி, பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களுக்கு திறந்த வேனின் சென்று பிரசாரம் செய்தார். அவர் கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு வாக்கு கேட்டு இங்கு வந்துள்ளேன். வருகிற 21-ந் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் கை சின்னத்தில் வாக்களித்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதை அப்படி சொல்லக்கூடாது. ஏன் என்றால் எம்.ஜிஆர்., ஜெயலலிதா தலைமையில் நடந்தது தான் அ.தி.மு.க. அரசு.

தற்போது மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் பினாமி அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது. தற்போது சட்டசபையில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான் வித்தியாசம் உள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களுமே ஆட்சியை கலைக்க தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காகவே இந்த அரசு குறியாக செயல்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார் இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தும் அளவுக்கு அவர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளது.

இந்த ஆட்சி கலைந்த அடுத்த நிமிடமே அவர்கள் எல்லாம் சிறைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் தான் அவர்கள் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தற்போது தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குடிசை தொழில்கள் நசுக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளும், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். தமிழக அரசால் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் கூட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு சீரழிந்து உள்ளது. பல இடங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் நடந்து வருகிறது. சென்னையில் அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார். அவரது வீட்டிற்கு நேரில் சென்று நான் ஆறுதல் கூறினேன். ஆனால் ஆளுங்கட்சியினர் யாராவது சென்று ஆறுதல் கூறினார்களா?. இல்லை. அவர்கள் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து மக்களை சந்திப்பது இல்லை. எந்த நேரத்திலும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை சந்திக்கின்ற கட்சி தி.மு.க. தான். மக்களின் குறைகளை கேட்கின்ற கட்சியும் தி.மு.க. தான். மக்கள் மீது அக்கறை இல்லாத அ.தி.மு.க.வுக்கு நீங்கள் இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது, வேட்பாளர் ரூபி மனோகரன், நாங்குநேரி தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர்), சிவக்குமார் (கிழக்கு), பழனிநாடார் (மேற்கு), நெல்லை சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, ஜோதிமணி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் எம்.சி.கார்த்திக், நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தி.மு.ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஞானதிரவியம் எம்.பி. தலைமையில் பரபரப்பாடியில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் ரூபி மனோகரனை ஆதரித்து வசந்தகுமார் எம்.பி., எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.

Next Story