புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 12 Oct 2019 10:30 PM GMT (Updated: 12 Oct 2019 8:14 PM GMT)

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி திருச்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது.

திருச்சி,

புரட்டாசி மாதத்தில் இந்துக்களில் பலர் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையாகும். இதையொட்டி திருச்சியில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவில், கே.கே.நகர் சுந்தர்ராஜ பெருமாள் கோவில், தென்னூர் பட்டாபிராமன் ரோட்டில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆஞ்சநேயர் கோவில்

இதேபோல் பக்தர்கள் மற்றும் உலக நன்மைக்காக கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு நேற்று ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. மூலவர் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.மேலும் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில், பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

Next Story