விபத்தினால் தலைவர் ஆனேனா: முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்


விபத்தினால் தலைவர் ஆனேனா: முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா? - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:15 PM GMT (Updated: 13 Oct 2019 7:08 PM GMT)

விபத்தினால் தலைவர் ஆனேன் என்று சொல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று மு.க.ஸ்டாலின் சாவால் விடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நல்லாபாளையம், கடையம், பனைமலை, சஞ்சிவிமங்கலம், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, கஞ்சனூர்கூட்டுரோடு, நேமூர், எசாளம் ஆகிய பகுதிகளுக்கு வேனில் சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் இன்று கொடுமையான ஆட்சி நடக்கிறது. விலைவாசி வி‌‌ஷம் போல் ஏறி வருகிறது. அண்மையில் பால் விலையை உயர்த்தி உள்ளனர். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் காபி, டீ குடிக்க முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி மின் இணைப்பு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். இதுவரையில் சிங்கிள் பேசுக்கு ரூ.1600 கட்டி வந்தோம். இனி 6,400 ரூபாய் கட்ட வேண்டிய நிலை வந்துள்ளது. கிராமங்களில் சிங்கிள் பேஸ் பெறுவதற்கு ரூ.1200-க்கு பதிலாக ரூ.2800 கட்ட வேண்டிய கொடுமை ஏற்பட்டுள்ளது. அதுபோல் காய்கறி விலையும் ராக்கேட்போல் உயர்ந்து வருகிறது. வெங்காயம் விலையை கேட்டாலே கண்களில் கண்ணீர் வருகிறது. விலை வாசியை கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது.

கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை கொண்டு வர முடியவில்லை. ஆனால் எடப்பாடி ஆட்சியில் மத்திய அரசு சுலபமாக ‘நீட்’ தேர்வை கொண்டு வந்து, திணித்து விட்டது. இதனால் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் முதலாவதாக அனிதா என்கிற மாணவி தற்கொலை செய்து மாண்டு போனார். விழுப்புரம் மாவட்டத்தில் பிரதீபா, மோனிசா ஆகிய 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொள்ள கூடாது என்று கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து குரல் கொடுத்தோம். பின்னர் ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரினோம். அதனை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது என்ன ஆனது, எந்த நிலையில் உள்ளது என்று ஆட்சியாளர்கள் யாரும் சொல்லவில்லை.

‘நீட்’ தேர்வு பற்றி பேசும்போதெல்லாம், சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் நாங்கள் நீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம், நீட் வராது, தீர்மானம் அனுப்பி வைத்துள்ளோம். டெல்லியில் இருந்து எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் உண்மை என்னவெனில் எப்போது தீர்மானம் அனுப்பினார்களோ?, அப்போதே தீர்மானம் நகல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதை இவர்கள் வெளியில் சொல்லவில்லை.

இதை உடனடியாக தெரிவித்து இருந்தால் அப்போதே இன்னொரு தீர்மானத்தை நிறைவேற்றி, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் தற்போது அந்த நிலை இல்லாமல் போய்விட்டது. இதை மூடி மறைத்த பாவம் சி.வி.சண்முகத்தை தான் சாரும். 8 பேர் இறந்ததற்கு சி.வி. சண்முகம் தான் காரணம். அதற்கு அவர் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சியை மக்களுக்காக பயன்படுத்தவில்லை, அவர்களுக்காக பயன்படுத்தும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

இங்கு பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி அப்பட்டமான பொய் பேசி இருக்கிறார். போலி சாமியார்கள் தான் இ‌‌ஷ்டத்துக்கு பேசுவார்கள். அதுபோன்று தான் அவர் பேசி சென்றுள்ளார். கோதாவரி-காவிரியை இணைப்போம், நந்தன் கால்வாய் திட்டம், ஏரி குளங்களை நிரப்புவோம், எல்லா வீட்டுக்கும் தண்ணீரை கொடுப்போம் என்று அப்பட்டமான பொய் சொல்லி இருக்கிறார். ஏரிகளை தூர்வாருகிறோம் என்கிறார், ஏரியை தூர்வாராமலே தூர்வாரியதாக கணக்கெடுத்து கொள்ளையடித்து இருக்கும் கூட்டம் தான் அவர்கள்.

நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தயவு செய்து நினைத்து பாருங்கள். அப்படியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர். அந்த வெற்றியிலும் 1.1 சதவீதம் தான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

மயிரிழையில் ஆட்சியை இழந்தோம். ஜெயலலிதா இறந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். பின்னர் என்ன பார்த்து சிரித்ததாலேயே அவருக்கு பதவி போனது. அதன்பின் சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். அதனாலே அவர் என்னை பார்த்து சிரிக்காமலே இருக்கிறார்.

இவ்வாறு வந்துவிட்டு, ஸ்டாலின் என்ன மக்களால் வந்தாரா, விபத்தின் காரணமாக தலைவராகிவிட்டார் என்று அப்பட்டமான பொய் பேசி வருகிறார். இப்போது நான் ரெடி, நீங்கள்(எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க மக்களிடம் வந்து நில்லுங்கள். உங்களால் தேர்தலில் ஜெயித்து வர முடியுமா?. நான் ரெடி.

அ.தி.மு.க. ஆட்சியை ஆதரித்து வருகிறார் அல்லவா மருத்துவர். கடந்த 2 நாட்களாக அவர் ஆட்சியின் போக்கை கண்டித்து அறிக்கை வெளியிடுகிறார். காவிரி கடைமடை பகுதியில் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய தொடங்கி விட்டது. இது தான் அவர்களின் கூட்டணி.

எனவே இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும், பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால், உங்களுக்காக பாடுபட, பணியாற்ற சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க உதயசூரியனுக்கு வாக்களித்து, மாபெரும் வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நம்மை விட்டு மறைந்த ராதாமணியின் புகழுக்கு புகழ்சேர்க்க நீங்கள் புகழேந்தியை தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story