திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: கொள்ளையன் சுரேசுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அதிகாரிகள் விசாரணை


திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: கொள்ளையன் சுரேசுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 14 Oct 2019 11:15 PM GMT (Updated: 14 Oct 2019 5:10 PM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் (வயது 28) கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி திருச்சி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 2-ல் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு தொடர்பான விசாரணை மாஜிஸ்திரேட்டு திருவேணி முன்னிலையில் நேற்று வந்தது. இதற்காக சுரேசை திருச்சி மத்திய சிறையில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கொள்ளையனை 15 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் கோசல்ராமன் கூறினார்.

7 நாட்கள் அனுமதி

சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார். மேலும் சுரேசிடம் உடல் நலக்குறைவு ஏதேனும் உள்ளதா? என மாஜிஸ்திரேட்டு கேட்டார். அப்போது மூச்சுத்திணறல் இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கும்படியும், 2 நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுரேசை அவரது வக்கீல் சந்தித்து பேசலாம், என்றார்.

சுரேசை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிப்பதாக இன்ஸ்பெக்டர் கூறினார். இதைதொடர்ந்து வருகிற 21-ந் தேதி வரை போலீஸ் காவல் விசாரணைக்கு மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார். அதன்பின் சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக கோட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

முருகனையும்...

நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி? கொள்ளையடித்த பின் நகைகளை பங்கு போட்டது எப்படி? வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் சுரேஷ் ஈடுபட்டுள்ளாரா? என போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். விசாரணையில் பல கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைக்கு பின் வருகிற 21-ந் தேதி மாலை சுரேசை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்துவார்கள். இந்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்த முருகனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story