சுகாதார கேடு ஏற்படுத்தும் பாதாள சாக்கடை திட்டத்தை புனரமைக்கவேண்டும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு


சுகாதார கேடு ஏற்படுத்தும் பாதாள சாக்கடை திட்டத்தை புனரமைக்கவேண்டும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 8:45 PM GMT)

பாதாள சாக்கடை திட்டத்தை புனரமைக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை நவல்பட்டு அண்ணாநகர் பகுதி மக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி அருகே உள்ளது நவல்பட்டு அண்ணாநகர். கடந்த 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினால் உருவாக்கப்பட்ட இந்த குடியிருப்பில் அரசு ஊழியர்கள், பெல், துப்பாக்கி தொழிற்சாலை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பினரும் வீடுகள் வாங்கினார்கள்.

சாலை, தெரு விளக்குகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேற பாதாள சாக்கடை இணைப்பு வசதியுடன் இந்த நகரம் அமைக்கப்பட்டு இருந்தது.

பாதாள சாக்கடை

வீட்டு வசதி வாரிய பராமரிப்பில் இருந்த இந்த குடியிருப்பு பின்னர் நவல்பட்டு மற்றும் கும்பகுடி ஊராட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் பாதாள சாக்கடை சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை தெருக்களில் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் கேட்ட போது தங்களிடம் அதற்கான பணம் இல்லை என கூறி கைவிரித்து விட்டனர்.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாநகர் அனைத்து குடியிருப்போர் நலசங்க கூட்டமைப்பு தலைவர் தங்க மணி தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று வேன்களில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் தொடர்பாக தங்கமணி கூறுகையில் ‘வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வரை பாதாள சாக்கடை முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கடந்த 22 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. உப்பாறு அருகே அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் பண்ணையில் உள்ள 4 மோட்டார்களில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது. 3 மோட்டார்கள் பல ஆண்டுகளாகவே பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு வசதி இருந்ததால் தான் நாங்கள் இங்கு வந்து வீடு வாங்கினோம். ஆனால் அந்த பாதாள சாக்கடையே இப்போது எங்களுக்கு பிரச்சினையாகிவிட்டது. பாதாள சாக்கடை பிரச்சிைனயால் சாலைகளும் போடப்படவில்லை. தெரு விளக்குகளும் எரியவில்லை. அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் பலன் இல்லை. அதனால் தான் இப்போது முற்றுகை போராட்டம் நடத்துகிறோம’் என்றார்.

கலெக்டரிடம் மனு

அதன் பின்னர் கூட்டமைப்ைப சேர்ந்த தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story