திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை
x
தினத்தந்தி 16 Oct 2019 11:15 PM GMT (Updated: 16 Oct 2019 5:47 PM GMT)

வங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரே‌‌ஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைரநகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது.

இந்த வழக்கில் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி மணிகண்டனும், முருகனின் அக்காள் மகன் சுரேசும் மோட்டார் சைக்கிளில் சுமார் 5 கிலோ நகையை எடுத்து சென்றபோது திருவாரூர் போலீசில் மணிகண்டன் சிக்கினார். தப்பி ஓடிய சுரே‌‌ஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி சரண் அடைந்தார். யாரும் எதிர்பாராத வேளையில் மறுநாள் (11-ந் தேதி) பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முருகன் சரண் அடைந்தார். மேலும் தனிப்படை போலீசார் திருவாரூரில் சுரேசின் தாயார் கனகவள்ளியையும் மதுரையில் முருகனின் கூட்டாளியான கணேசனையும், நகைகளை விற்று கொடுக்க உதவியாக இருந்த ராதாகிரு‌‌ஷ்ணன் என இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை முருகனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால்தான் தெரியவரும்.

மேலும் முருகன் கும்பலுக்கு திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் துளையிட்டு பணம், நகை கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்பு உள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. அத்துடன் ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் உள்ள நகைக்கடை, வங்கிகளிலும் அக்கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இதற்கிடையே செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்த சுரேசை திருச்சி கோட்டை போலீசார் கடந்த 14-ந் தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மதுரை வாடிப்பட்டி போலீசார் திருச்சி வந்து சுரேசிடம் விசாரித்தனர். தொடர்ந்து நேற்று 3-வது நாளாக திருச்சி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது கிளு கிளுப்பான பரபரப்பு தகவலை சுரே‌‌ஷ் தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

எனது மாமா (முருகன்) என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க திட்டமிட்டார். அதன்படி, 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.

அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை எழுந்ததால், மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.அதன்படி, திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை மாமா முருகன் திட்டப்படி கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். அவரிடம் கால்‌ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா? என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

போலீஸ் காவலில் உள்ள சுரே‌‌ஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாக பெற்ற அந்த பிரபல நடிகையிடம் தனிப்படை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர் ஒருவரின் வாரிசு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுரே‌‌ஷ் கும்பலுடன் உல்லாசமாக தொடர்பில் இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் குறித்தும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொள்ளையன் முருகன், சுரே‌‌ஷ் உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் உள்ள நடிகைகள் கிலியில் உள்ளனர். நடிகைகளிடம் விசாரித்தால்தான் கொள்ளையன் சுரே‌‌ஷ் சொன்னது உண்மையா? என தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பெங்களூரு போலீசார் காவலில் இருக்கும் முருகனின் காவலை மேலும் 4 நாட்களுக்கு பெங்களூரு கோர்ட்டு நேற்று நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், முருகனை திருச்சி போலீசார் காவலில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Next Story