பெண்ணாடம் அருகே, கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்


பெண்ணாடம் அருகே, கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 17 Oct 2019 10:15 PM GMT (Updated: 17 Oct 2019 12:58 PM GMT)

பெண்ணாடம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது நாசமானது.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுப்பிரமணியன்(வயது35). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டிவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெண்ணாடத்தில் உள்ள ஒரு பங்கில் டீசல் போட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சின்னகொசப்பள்ளம் கிராம பகுதியில் சென்றபோது, காரின் என்ஜீன் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் உடனே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடி உயிர்தப்பினார்.

இதனிடைய தீ கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து நாசமானது. மேலும் காரில் சுப்பிரமணியன் வைத்திருந்த ரூ.10 ஆயிரமும் எரிந்து சாம்பலானது. இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story