விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை - விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு


விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை - விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 9:45 PM GMT (Updated: 17 Oct 2019 1:18 PM GMT)

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விருத்தாசலம், 

பெண்ணாடம் அருகே உள்ள துறையூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 50). விவசாயி. இவருடைய மகள் கிருஷ்ணவேணி, பக்கத்து வீட்டை சேர்ந்த கோவிந்தராஜ்(55) மருமகள் கோகிலாவுடன்(17) பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, தனது மகளை கண்டித்தார். இது பற்றி கோகிலா, தனது மாமனாரிடம் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், இவருடைய மகன் ராஜா(37), கோவிந்தராஜ் மனைவி ஜானகி(45), கோகிலா ஆகிய 4 பேரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு கிடந்த செங்கல் மற்றும் கற்களை வீசி அவர்கள் தாக்கியதில் கிருஷ்ணமூர்த்தி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் கடந்த 30.5.2018 அன்று நடந்தது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் பாலகிருஷ்ணன் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ், ராஜா, ஜானகி, கோகிலா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு கூறினார். அவரது தீர்ப்பில், கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்த கோவிந்தராஜ், ராஜா ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் இருந்து ஜானகி விடுதலை செய்யப்பட்டார். கோகிலா 18 வயதுக்குட்பட்டோர் என்பதால், அவரது வழக்கு கடலூரில் உள்ள ஒரு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். 

Next Story