மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - நாராயணசாமி நம்பிக்கை


மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது - நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2019 11:30 PM GMT (Updated: 18 Oct 2019 11:28 PM GMT)

மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நாள்தோறும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று கிருஷ்ணாநகர் பகுதியில் அவர் வாக்குசேகரித்தார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முருகன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வாக்குசேகரிப்பின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். அவர் 4 இடங்களில் பேசினார். அவரது பேச்சை கேட்க பொதுமக்கள் உற்சாகமாக திரண்டு வந்தனர்.

நாங்கள் அவரை சந்தித்து என்ன கோரிக்கை வைத்தோமோ அதை பிரசாரத்தின்போது எடுத்துரைத்து சென்றார். திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு கவர்னர் தரும் தொல்லைகளை எடுத்துக்கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு புதுச்சேரி மக்கள் மீது அக்கறையில்லை. மாநில வளர்ச்சியிலும் அவரது பங்கு இல்லை. அவர் கிரண்பெடிக்கு உறுதுணையாக இருப்பதை சுட்டிக்காட்டினார். 2011-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துவிட்டு அதன்பின் அவர்களை கழற்றிவிட்ட ரங்கசாமியின் சுயரூபத்தை தோலுரித்து காட்டினார்.

மு.க.ஸ்டாலினின் பிரசாரத்தின் காரணமாக ஜான்குமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ரங்கசாமியின் நாடியை பிடித்து பார்த்தால் அவரது தோல்வி பயம் தெரியும். அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள். ஜெயலலிதா இறந்த பின்னர் அவருடைய எதிரியுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் துரோகம் செய்துள்ளனர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story