தேர்தலில் போட்டியாளர்கள் இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா பொதுக்‌கூட்டங்கள் நடத்தப்பட்டது ஏன்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி


தேர்தலில் போட்டியாளர்கள் இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா பொதுக்‌கூட்டங்கள் நடத்தப்பட்டது ஏன்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 20 Oct 2019 11:47 PM GMT (Updated: 20 Oct 2019 11:47 PM GMT)

தேர்தலில் போட்டியாளர்களே இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா கலந்துகொண்ட இத்தனை பொதுக்கூட்டங்கள் எதற்காக என பா.ஜனதாவுக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக போட்டியாளர்கள் யாருமே இல்லை என கூறினார்.

போட்டியாளர்கள் இல்லை என்றால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பா.ஜனதா ஆளும் மற்ற மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் ஏன் இங்கு பிரசாரத்திற்கு வர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது. மராட்டியத்தின் புவியியல் எல்லைகளை சிவசேனா அப்படியே வைத்திருக்க விரும்புகிறது.

ஏற்கனவே மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து கொண்டே அந்த கட்சிக்கு எதிராக அவ்வப்போது அதிரடி கருத்துகளை தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சிவசேனாவும் அதே கேள்வியை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது:-

மராட்டிய சட்டசபை தோ்தல் களத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு சவால் விடுவதற்கு சரியான மல்யுத்த வீரர் (எதிர்க்கட்சி ) யாரும் இல்லை என முதல்-மந்திரி பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார்.

அப்படியானால் பிரதமர் மோடியின் 10 பொதுக்கூட்டங்கள், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் 30 பொதுக்‌கூட்டங்கள், முதல்-மந்திரி பட்னாவிஸ் 100 பொதுக்கூட்டங்களின் பின்னணி குறித்து கேள்வி எழுகிறது.இதே கேள்வி தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாராலும் எழுப்பப்பட்டு வருகிறது. அது ஒன்றும் தவறு அல்ல.

தேர்தல் களத்தில் போட்டி இல்லை என்று பட்னாவிஸ் கூறினாலும், உண்மையில் போட்டி இருக்கத்தான் செய்கிறது. இது தான் பா.ஜனதா தலைவர்களை பல பொதுக்கூட்டங்களை நடத்த கட்டாயப்படுத்தி உள்ளது.

ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டியிடுவது சட்டசபையில் அமருவதற்காக மட்டும் அல்ல. புதிய தலைமுறையினர் அவர் மாநிலத்தை வழிநடத்த விரும்புகிறது. வரும் காலங்களில் ஆதித்ய தாக்கரே மராட்டிய அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவார்.

37 தொகுதிகளில் சிவசேனா அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவும், சிவசேனாவும் முதலில் தனித்தனியாகவே தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருந்தன. தற்போது கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தேர்தலில் போட்டியிட விரும்பிய பலர் அதிருப்தி அடைந்தனர். எனவே அவர்களில் சிலர் தனியாகவே போட்டியிட முடிவு செய்து விட்டனர். அவர்களை அதிருப்தியாளர்கள் என அழைக்க மாட்டேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story