அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்


அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 24 Oct 2019 7:14 PM GMT)

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூரில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, கணக்கில் வராத ரூ.2¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தினுள் இருந்த சார்-பதிவாளர்கள், மற்றும் அலுவலக ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் சில ஊழியர்களை மட்டும் போலீசார் வெளியே செல்ல அனுமதித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை 6 மணிக்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, சார்-பதிவாளர் ஆனந்தராஜன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன், சார்-பதிவாளர் மற்றும் 2 ஆவண எழுத்தர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் குடோனில் நேற்று மாலை 3 மணியளவில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னவள்ளி தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணியில் இருந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

இதனால் டாஸ்மாக் குடோனுக்கு மது பாட்டில்கள் இறக்க வந்த லாரிகளும், குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்காக மது பாட்டில்களை ஏற்றிய லாரிகளும் உள்ளேயே நின்றன. மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தத்தில் புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவெறும்பூரில் உள்ள அரசு அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story