முருங்கையை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்


முருங்கையை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 7:35 PM GMT)

அரவக்குறிச்சியில் முருங்கையை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தினார்.

கரூர்,

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் அபிவிருத்தி மற்றும் கண்காணிப்பு குழு ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழுவின் தலைவரும், கரூர் எம்.பி.யுமான ஜோதிமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜி, ராமர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா மற்றும் குழுவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஜோதிமணி ஆய்வு மேற்கொண்டார். அரசின் திட்டங்களுக்கு பயனாளிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது, கொடுக்கப்பட்ட இலக்கீடுகள் முறையாக எய்தப்பட்டுள்ளதா?, எடுக்கப்பட்ட பணிகள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அவை எப்போது முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

குளிர்பதன கிடங்கு

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஜோதிமணி எம்.பி. பேசுகையில், “அரவக்குறிச்சி பகுதியில் முருங்கையை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மேலும் குளித்தலை பகுதியில் வெற்றிலை மற்றும் வாழை ஆகியவற்றை சேமித்து வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்க தேவையான கருத்துருக்களை வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தயாரிக்க வேண்டும்.

கிராமங்கள் தோறும் விவசாயிகளின் நலன் கருதி மண்வளங்களை பரிசோதிக்கும் வகையில் மண்பரிசோதனை சுழற்சி முறையில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் செந்தில்பாலாஜி பேசுகையில், இதுபோன்ற ஆய்வுக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பதிலாக உயர் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்றார்.

மீண்டும் ஒருமுறை நடத்த...

கூட்டம் முடிந்ததும் ஜோதிமணி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “கூட்டத்தில் கொடுக்கப்பட்ட விவாத பொருட்களில் திட்ட மதிப்பீடு, திட்டங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது, நிதி ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை. நெடுஞ்சாலை, ரெயில்வே, தொலை தொடர்பு துறை, போலீஸ் ஆகிய துறைகள் இந்த கூட்டத்தில் விடுபட்டிருந்தன. 42 விவாத பொருட்களுக்கு 31 மட்டுமே தயார் செய்திருந்தனர். அதனால் இந்த கூட்டத்தை மீண்டும் ஒரு முறை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். அதில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க கூறியுள்ளோம். 3 மாதம் ஒருமுறை இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் போது எனக்கு (ஜோதிமணி) தகவல் தெரிவிப்பதில் துறை ரீதியான அதிகாரிகள் முறையற்ற வகையில் செயல்படுகின்றனர். மாலை 3 மணிக்கு நடைபெறுகிற கூட்டத்திற்கு காலை 11 மணிக்கு தகவல் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினரை கலந்து பேசி கூட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளேன். இதுவரை இருந்திருந்த எம்.பி.க்கள் பற்றி கவலை இல்லை. என்னை பொறுத்தவரை கரூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட முன்னிலையில் இருக்க வேண்டும். அதற்கான அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளேன்” என்றார். 

Next Story