தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை: ரெயில், பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை: ரெயில், பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2019 11:00 PM GMT (Updated: 26 Oct 2019 6:49 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரெயில், பஸ்களில் வெளியூருக்கு செல்வதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தஞ்சாவூர்,

தீபாவளி பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பூ, பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கிராமப்புற மக்கள் தஞ்சை நகரில் கூடினர்.

இதனால் தஞ்சை காந்திஜிசாலை, அண்ணாசாலை, தெற்குஅலங்கம், தெற்குவீதி, கீழவாசல், கீழவீதி, தென்கீழ்அலங்கம் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகமாக காணப் பட்டனர். துணிக்கடைகள், ஆயத்த ஆடை நிறுவனங்களில் புதுப்புது வகையான துணி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் முக்கிய வீதிகளில் துணிகள், காலணிகள், போன்சி பொருட்கள், குடைகள் விற்பனை செய்வதற்காக தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இறுதிக்கட்ட விற்பனை

தீபாவளி இறுதிக்கட்ட விற்பனையாக துணிக்கடைகள் மட்டுமின்றி தரைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் காந்திஜிசாலையில் இர்வீன்பாலம் முதல் பழைய பஸ் நிலையம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடைகளுக்கு வந்தவர்கள் நீதிமன்றசாலை, ஜி.ஏ.கெனால் சாலையோரங்களில் மோட்டார் சைக்கிள்களையும், கார்களையும் நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் செல்வோர் மாற்று வழி வழியாக சுற்றி சென்றனர்.

மக்கள் கூட்டம்

இதேபோல் பட்டாசு கடைகளுக்கு மக்கள் வந்து பட்டாசுகளை அதிகஅளவில் வாங்கி சென்றனர். தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தஞ்சை நகருக்கு வந்ததால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. பொருட்களை வாங்கி கொண்டு கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக டவுன் பஸ்களில் இடம் கிடைக்காமல் பலர் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது ஊர்களுக்கு சென்றனர். ரெயில்களிலும் மக்கள் அதிகமாக பயணம் செய்தனர்.

நெரிசலை பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம், பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தது. பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.

பஸ், ரெயில் நிலையம்

தஞ்சை நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு வந்த பஸ்கள் அனைத்தும் மேலவீதி வழியாக வந்து சென்றன. மேலும் வெளியூருக்கு செல்லும் பயணிகளின் கூட்டமும் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் அதிகமாக காணப்பட்டன. தஞ்சையில் நேற்று முன்தினம் இரவும் ரெயில், பஸ் நிலையத்தில் அதிகமாக பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

Next Story